வெள்ளி, 29 மே, 2015

தனித்துவம்தான் நம் சிறப்பு!

நம் அனைவருக்குமே ஒப்பீடு
என்பது புதிதல்ல..
பிறந்த வீடு முதல்
வளர்ந்த சமூகம் வரை
இந்த முறையில்தான் வளர்ந்திருக்கிறோம்!

ஒப்பிடுவது தவறுமல்ல ஆனால்,
எதை எதனோடு ஒப்பிட வேண்டும் என்பது
முக்கியம்..நூற்றுக்கு நூறு
சதவீதம் ஒரே குணநலன்கள் உள்ள ஒத்தவற்றை
ஒப்பிடலாம்...

உதாரணமாக, தண்ணீரை
தண்ணீருடன் ஒப்பிடலாம்.
பாலுடன் எப்படி ஒப்பிடமுடியும்?
அதேபோல்தான் நாமும்,
மனித இனத்தில் ஒத்தவர்கள்..ஆனால்,
முகங்கள் வேறு, உயரம் வேறு, நிறம் வேறு,
குடும்பம் வேறு, மூதாதையர்கள் வேறு,
ஒவ்வொருவரின் அனுபவம் வேறு,
சந்திக்கும் சூழ்நிலை வேறு, மொழி வேறு,
நாடு வேறு குறிப்பாக  எண்ணங்கள் வேறு!!
இப்படியிருக்க, எப்படி ஒரு மனிதனை இன்னொரு
மனிதனோடு ஒப்பிட முடியும்?

ஒருவருக்கு கணக்கு நன்றாக தெரியும்.
மற்றொருவருக்கு மேலாண்மை செய்ய தெரியும்.
கணக்கு தெரிந்தவர் மேலாண்மை செய்யவோ,
மேலாண்மை தெரிந்தவர் கணக்கை கற்றுகொள்ளவோ
முயற்சித்து காலத்தை வீணடிக்காமல்
மேலாண்மை செய்பவர் கணக்கு தெரிந்தவரை
கணக்காளராக நியமித்து, கணக்கு போட தெரிந்தவர்
தன் கணித அறிவை மேலாளருக்கு உதவும்வகையில்
பயன்படுத்தினால், இருவரும் அவரவருக்கு
பிடித்த வேலையை செய்யலாம்! வெற்றியும் பெறலாம்..
இதுதானே புத்திசாலித்தனம்.

இந்த வினாடி ஒன்று நினைப்போம் மறுவினாடியே
முற்றிலும் வேறமாதிரி நினைப்போம்.
இன்று ஒருமாதிரி கருத்துக்கு சம்மதம் தெரிவிப்போம்.
சிலகாலம் கழித்து அதே கருத்துக்கு முற்றிலும்
சம்மந்தமே இல்லாத ஒரு புதிய கருத்தோடு ஒத்துபோவோம்.
இது சரியா தவறா என்பது வேறு ....
மனித மனம் மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போன்றது..

இப்படி நொடிக்கொரு எண்ணம், நாளுக்கொரு
விருப்பம் என்றிருக்கும்  முற்றிலும் இரு வேறு
மனிதர்களை எப்படி ஒப்பிட முடியும்?
இரு வேறு மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து
வியத்தலோ, இகழ்தலோ தேவையில்லை.
உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை.
மாறாக வேறு வேறு அவ்வளவுதான்.

யாரும் யாரையும் பார்த்து தன் இயல்பை
மாற்றிக்கொள்ளவும் தேவையில்லை
நீ வேறு நான் வேறு அவ்வளவுதான். என்னால் உன்னை போல்
இருக்க முடியாது. உன்னால் என் வாழ்க்கையை
வாழ முடியாது! நீ உன் நிறைகுறைகளோடு
நீயாகத்தான் இருக்க வேண்டும். நானும் அவ்வாறே.
இதில் எப்படி அவர் உயர்ந்தவர் இவர்
தாழ்ந்தவர்?


இயற்கையின் படைப்பில் அனைத்தும்
அதனதன் தனித்துவத்தில் இருக்கும்வரைதான் சிறப்பு!
எந்த உயிரினத்திற்கும் ஒப்பிடும் பழக்கம் கிடையாது
ஆறறிவு ஜீவனைத்தவிர!
ஒரே தாயின் வயிற்றில் பிறந்தாலும்
இரண்டு குழந்தைகளும் வேறு வேறு
குணாதிசயங்களோடு படைக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் இல்லாமலா இருக்கும்!
இயற்கையின் படைப்பில் எதுவும்
காரணமின்றி படைக்கபடுவதில்லை!
நம் தனித்தன்மைதான் நம் அடையாளம்.
எல்லோருக்கும் ஒரே ஆசைகள், கனவுகள்,
இலட்சியங்கள் இருந்தால் உலகம் இவ்வளவு
விரிவடைந்திருக்குமா? இல்லை
அமைதியான சுமூகமான வாழ்க்கையைத்தான்
வாழ முடியுமா?
ஒரே இடத்தை பிடிக்க உலக மக்கள் அனைவரும்
போட்டியிட்டால் நிலமை என்னவாகும்?

மற்றவரை பார்த்து அதேபோல் நாமும் வரவேண்டும்
என்று எண்ணிக்கொண்டு, நமக்குள் இருக்கும் தனித்தன்மையை
கொலை செய்வது சரியா?
இயற்கையை போல் ஒரு மிகச்சிறந்த
படைப்பாளி இந்த உலகில்
எதுவுமில்லை! யாருமில்லை! இனியும் வரப்போவதுமில்லை!
மனிதனுக்கென்று உள்ள தனி சிறப்புகள், தனித்தன்மைகள்
காரணங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளது!

நீ மற்றவரை விட சிறந்தவரோ, பணக்காரரோ,
அழகானவரோ அல்ல நீங்கள் தனித்துவமானவர்..
ஆகவே, ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த பாதையில்
பயணித்து வாழ்வின் ரகசியத்தை
வாழ்க்கையின் அதிசயத்தை
மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமே தவிர...
அடுத்தவர் போன பாதையில் நாமும் பயணிக்க விரும்பினால்
இந்த அழகிய அரும்பெரும் வாழ்க்கையை நம்மால்
அனுபவிக்க முடியாமலே போய்விடும்.
நம் பாதையும் பயணிக்க யாருமின்றி
வெறுமையாகவே இருந்துவிடும்!

கடவுள் படைப்பில் கடைசி படைப்பான
மனிதப்பிறவிதான் தலைச்சிறந்த பிறவி!
ஒரு முறைதான் இப்புவியில் வாழ போகிறோம் அதில்
மறுபரிசீலனை எல்லாம் நம் ஆயுளுக்கு கிடையாது
இன்னொரு பிறவி இருப்பதும் உறுதியில்ல
நாம் வாழும் காலம் சில நூறு ஆண்டுகளே!
அந்த இடைப்பட்ட காலத்தில்,
யாரும் யாரோடும் தன்னையோ பிறரையோ ஒப்பிடாமல் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதையில் மகிழ்ச்சியாக பயணித்து வாழ்வின் அதிசயத்தை ரசிக்க அனைவரையும் வாழ்த்துகிறேன்...

அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

செவ்வாய், 12 மே, 2015

பொன்மொழிகள் !!!

 முப்பது பொன்மொழிகள்

1. காலத்தை வெல்ல முடியாது- ராமாயணம்

2. சரியான காலத்தில் உதவி குறைந்தாலும் சிறந்ததே. தேவை இல்லாத காலத்தில் கூடக் கிடைத்தாலும் என்ன பயன்?

3. நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் காலம் விழித்துக் கொண்டிருக்கிறது

4. மரண காலம் வந்துவிட்டால் யார் யாரைக் காப்பாற்ற முடியும்? 

5. நைந்து போன கயிற்றில் தொங்கும் கிணற்றுப் பானையை யார் விழாமல் பிடிக்க முடியும்?

6. வயது போனபின்பு தன்வந்த்ரியே வந்து வைத்தியம் செய்தாலும் பயன் என்ன?

7. ஒவ்வொரு வினாடியும் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கிறது!

8. எண்ணக்கூடிய விஷயங்களில் நான் காலமாக இருக்கிறேன்

9. அழிவில்லாத/முடிவில்லாத காலம் நானே!–பகவத் கீதை

10. பாறையானாலும் இறுதியில் அழிந்து போகும் (மண் ஆகிவிடும்) 

11. ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்—மரணம் என்பது அகாலத்தில் ஏற்படுவது அரிது.

12. எல்லா ரத்னங்களையும் கொடுத்தாலும் ஒரு வினாடி ஆயுளைக் கூட விலைக்கு வாங்க இயலாது. அதை வீணாக்குவது எப்பேற்பட்ட மடமை!

13. சமயம் அறிந்து செய்வது பலன் தரும்.

14. காலம் விளையாடுகிறது. ஆயுள் போய்க்கொண்டிருக்கிறது

15. காலத்தினுடைய போக்கு புரிந்துகொள்ள முடியாதது.

16. காலம் செல்லவில்லை; நாம்தான் சென்று கொண்டிருக்கிறோம் (நம் ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் சென்று கொண்டிருக்கிறது)

17. கடந்த காலம் திரும்பிவாராது

18. சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் (பாரதி)

19. சென்றதனைக் குறித்தல் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ண வேண்டாம் (நிகழ்காலத்தை பயனளிக்கும் வகையில் செலவிடு))

20. நாளை நாளை எண்ணாதே! நாளை வீணில் போக்காதே! நாளை நம்முடைய முறையோ; நமனுடைய முறையோ; யார் அறிவார்?

21. வண்டிச் சக்கரம் போன்றதே வாழ்க்கைச் சக்கரம்; மேலும் கீழும் போய்வரும்.

22. நல்ல காலம் வந்து விட்டால் மங்கள விஷயங்கள் தொடர்ந்து வரும் (தை பிறந்தால் வழி பிறக்கும்)

23. கெட்ட காலத்தில் புத்தி பேதலிக்கும்.

24. காலமே ஒருவனை பலவானாகவும் பலவீனனாகவும் ஆக்குகிறது

25. உரிய காலம் வரும் வரை கொக்கு போல காத்திரு!

26. ஒவ்வொரு வினாடியும் வங்கியில் சேமித்த நம் வாழ்நாள் கழிந்து கொண்டே இருக்கிறது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது

27. காலமே எல்லா காரியங்களையும் முடிக்கிறது.

28. என்ன முயன்றாலும் வீட்டில் வாழமுடியாது (இறுதி நேரம் வந்துவிட்டால்)

29. காலம் என்பது வலிமையானது போனது போனதுதான்; திரும்பிவாராது.

30. மனிதர்களில் தன் ஆயுளை அறிந்தவன் எவனும் இல்லை

அன்புடன் 
சங்கீதா சீனிவாசன்