திங்கள், 28 செப்டம்பர், 2015

மகிழ்ச்சியாக வாழ மூன்று வழிகள்

வெளிசூழ்நிலை என்னவாக இருந்தாலும்
மனம் அனுமதிக்காமல் நமக்குள் எந்த மாற்றமும் நடக்கபோவதில்லை...

நம் கவலைக்கு பொதுவாக மூன்று காரணங்கள்....
முதலாவது,
 "நம்மை பற்றி மற்றவர்கள் என்ன
நினைப்பார்கள் என்று நினைத்து கவலை படுவது. இரண்டாவது, ஒரு செயலை செய்துமுடித்த பின் அதில் திருப்தியடையாமல்...."அதை வேறுவிதமாக செய்திருக்கலாமோ" என்ற கவலை.
மூன்றாவது, நாளை பற்றிய கவலை...(எதிர்காலம்)

இவற்றை கையாள்வது சுலபம்...

பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரைதான் அது பிரச்சினை...தீர்வு கிடைத்தபின் அது ஒரு அனுபவம்..

முதலாவது கவலை, நம்முடைய பிரச்சினையே அல்ல, அது முழுதும் மற்றவர்களின் பிரச்சினை..
காந்தியையே குறைகூறும் உலகத்தில் நம்மை பற்றி அப்படி என்ன புகழ்ந்துவிடப்போகிறார்கள்? என்னதான் புறம் கூறுதல் கூடாது என்று சொன்னாலும் / படித்தாலும் கேட்டுவிடவா போகிறோம்?

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்கு பின்னால் நம்மை பற்றி என்ன பேசுகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இது பாதி கவலையை இல்லாமல் செய்துவிடும்..

மனிதர்கள் பல விதம். பத்து பேருக்கு பிடித்ததுபோல் இன்னொரு பத்துபேரால் கூட இருக்க முடியாது. பிறகெப்படி ஒருவரால் அனைவருக்கும் பிடித்ததுபோல இருக்க முடியும்? முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்... மாற்ற முடியாத விஷயங்களோடு மல்லுக்கு நிற்காதீர்கள்.

நம்மை பற்றி பிறர் என்ன பேச வேண்டும், எப்படி நினைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதைப்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக, அதேபோல் அவர்கள் நினைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.. வேறுவிதமாக நினைத்தால் அது நம்முடைய பிரச்சினை அல்ல...அவர்களுடைய கண்ணோட்டம் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது, எதிலும் திருப்தியடையாமல் இருப்பது,
இதற்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும். கடந்த காலத்தை சரி செய்யவே முடியாது. முடிந்தது முடிந்ததுதான். என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டும். மின்னஞ்சலை அனுப்பும் முன் பல தடவை சரி பார்த்துகொள்ளலாம். ஆனால், அனுப்பிய பிறகு ஒரு முறை கூட, செய்தியை வேறுவிதமாக சொல்லியிருக்கலாமோ...என்று எண்ணவே கூடாது. அதில் அணுவளவும் பயனில்லை. அனுப்பிவிட்டோம். வேலை முடிந்தது.
பதில் வரும்வரை அதை பற்றி எதுவும் சிந்திக்க கூடாது. இதை வாழ்வில் எல்லா செயலிலும் பொருத்தி பார்க்கலாம்.

மூன்றாவது காரணம், எதிர்காலத்தை நினைத்து கவலை படுவது....
பக்திதான் இதற்கு மிகச்சிறந்த மருந்து. ஏதோ ஒன்றின் மேல் முழு நம்பிக்கை வைப்பது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிவன், அல்லா, இயேசு, வானம், கடல், பூக்கள், மலை, மண் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்காத நம்பிக்கையாக இருக்க வேண்டும். அந்த உண்மையான பக்தியோடு, நாளை எது நடந்தாலும் அது என் நல்லதுக்குத்தானே தவிர கவலை பட அல்ல என்று மனதார நம்ப வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் நான் எப்படி இருக்க வேண்டும் திட்டமிடுவது வேறு, கவலை படுவது வேறு. எதிர்காலத்தை பற்றி திட்டமிடுங்கள் ஆனால் கவலை படாதீர்கள்.

ஒன்று மட்டும் உண்மை... கவலை படுவதால் எதுவும் மாற போவதில்லை. மறுமுறை உபயோகிக்க வேண்டும் என்று துணிகளை துவைக்கிறோம், பாத்திரங்களை கழுவுகிறோம், வாகனங்களை கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கிறோம். இவைகளுக்கே நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது நம் மனதை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்று யோசியுங்கள்!

டெல்கார்னகி சொன்னதுபோல, எந்த பொருளுக்கும் அதைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்குவது முட்டாள்தனம். அதைப்போல அற்பமான விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி கவலைப்படுவதும் முட்டாள்தனம்தான். கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

வாழ்க வளமுடம்...

















அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

வியாழன், 24 செப்டம்பர், 2015

நமது கலாச்சாரம்.. நமது பெருமை















இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை மட்டுமே வாழ வைக்கும் தமிழகமாக மாறிவிட்டதோ என்று அஞ்ச தோன்றுகிறது. வந்தாரை என்பதில் நான் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை. அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம்தான்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கேற்ப
சமூகத்திற்கு நன்மை பயக்கும் புதிய மாற்றத்தை வரவேற்று
நன்மையல்லாத பழையதை நீக்கிவிடலாம்...
இதற்கு பெயர்தான் மாற்றம்! இதற்கு பெயர்தான் வளர்ச்சி!
இதுதான் சமூகத்திற்கு தேவை!

ஆனால், இன்று அப்படியா நடக்கிறது?
அமெரிக்காவில் நீல நிறத்தில் உணவு சாப்பிடுறாங்க என்றால்,
உடனே நம்ம சாதத்தில் நீல நிற மையை ஊற்றியாவது நீல நிற உணவாக மாற்றி சாப்பிட்டு விடுவோம்!

மாற்றம் என்ற பெயரில், மேலை நாட்டு கலாச்சாரங்களை
ஏன்? எதற்கு? என்று ஒரு வினாடி கூட சிந்திக்காமல் ஏற்றுகொள்கிறோம்!
இதுவரை இல்லாத ஒன்று நம் சமூகத்திற்கு புதிதாக நடைமுறைக்கு
வருகிறதே,  இதனால் நமக்கும் நம் சமூகத்திற்கும் நம் நாட்டிற்கும்
நன்மையா தீமையா என்று ஆராயாமல்
கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டோம்.

இன்று, ஆணும் பெண்ணும் சமம்!!
என்பது...
இருவருக்கும் பேச்சு சுதந்திரம்
எழுத்து சுதந்திரம்
கருத்து சுதந்திரம்
சொத்துரிமை
சமத்துவ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஊதியத்தில் சம உரிமை
இவைதானே தவிர...

ஒரே மாதிரியான ஆடை அணிவதல்ல..
அப்படியே பார்த்தாலும், எந்த ஆண்களும்
அரைகுறை ஆடையை அணிவதுபோல் தெரியல...
ஒரு மாதம் குழந்தையை நான் கவனித்தால் அடுத்த மாதம் நீ..

இருபாலருக்கும் இடையில் எந்த வேறுபாடும்
வித்தியாசமும் இருக்க கூடாது என்றால், பாலினத்தில் பெண் என்ற பெயரையே நீக்கிவிடலாமே!! எதற்கு தேவையில்லாமல் ஒரு பாலருக்கு இரண்டு பெயர்கள்? பூமியில் ஒரு சூரியன் ஒரு நிலவு. அப்படித்தான் குடும்பத்தில் ஒரு ஆண் (கணவன்) ஒரு பெண்.(மனைவி). இரண்டு சூரியன்கள் இருந்தால் பூமி என்னாகும்??





நம் அரிய பழம்பெரும் கலாச்சாரம், வளர்ந்த சமூகத்தால் மதிக்கப்படுவதுதான், அதற்கு கிடைக்கும் மரியாதையே தவிர..
நாம் வளர்ந்த பின் அதை தூக்கி எறிவது அல்ல...



மேலை நாட்டில்,
பெண்ணோ ஆணோ எத்தனை திருமணம்
வேண்டுமானாலும் செய்யலாம்,
பிள்ளைகள் பெற்று, வாழ்க்கையே வாழ்ந்து முடித்துவிட்டு
கடைசியாக திருமணம் செய்யலாம்..
ஆண்கள், உடலை மறைக்க உடை அணிவார்கள்..
ஆனால், பெண்களுக்கு.. உடலை காட்டக்கூடிய வகையில்தான்
உடையே தயாரிக்கப்படும்..
அந்த துணிகளை கொண்டுவந்து வியாபாரத்திற்காக மக்கள் தொகை அதிகம் உள்ள கலாச்சாரமுடைய நாட்டில் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
நாம் நம் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் பணத்தையும் கொடுத்து, நம் கலாச்சாரத்தையும் அழிக்கிறோம்!
இதுதான் நமக்கு தெரிந்த வளர்ச்சியா?

குருவுக்கு அடுத்துதான் கடவுள் என்ற இந்த
இடத்தை ஆசிரியர்களுக்கு கொடுத்த ஒரே கலாச்சாரம் உலகத்திலேயே நமது கலாச்சாரம்தான். இப்போதெல்லாம் ஆசிரியர்களை சக மனிதராக நினைப்பதே பெரிது..
இதில் எங்கே கடவுளை விட ஒருபடி மேலே வைப்பது!!!




மேற்கத்திய கலாச்சாரம்
 தவறு என்று சொல்லவில்லை.
நம்மிடம் இல்லாத நல்ல பழக்கங்கள் அவர்களிடம்
நிறைய உள்ளன..



வளரும் நாடுகள் எல்லாமே வளர்ந்த நாடுகளை அன்னார்ந்து பார்த்து ஆச்சர்யபடுவதில் வியப்பேதுமில்லை!!
அதற்காக அவர்கள் கலாச்சாரம் உயர்ந்தது நம் கலாச்சாரம் தாழ்ந்தது என்ற கண்ணோட்டம் தவறு..

அவர்கள் பண்பாடு வேறு நம் பண்பாடு வேறு..அவ்வளவுதான்!!
நாம் நாளை இன்னும் வளர்ச்சி அடையலாம்...ஆனால்,
அடையாளத்தை இழக்க கூடாது.
திருடனே பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல்..

நாமே விழித்துக்கொள்ளவில்லை என்றால்
எல்லாம் இழந்து பின் வருந்துவதில் பயனேதும் இல்லை...
இன்று இல்லாத பணம் நாளை வரலாம்..
வெள்ளையர்களை விட உயரத்திற்கு செல்லலாம்..
உழைப்பு மட்டும் இருந்தால் போதும்!! ஆனால்,

கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றை இழந்தால்
மீண்டும் பெற முடியுமா??
நாம் இருக்கும்போதே இதை வாழ வைக்காவிட்டால்,
யாரால் என்ன செய்ய முடியும்? நம் கலாச்சாரத்தை நம் எதிர்கால
தலைமுறையிடம் படிப்பிக்க வேண்டியது நம் கடமை...
புத்தகத்தில் படித்து நடைமுறைபடுத்த இது அறிவியல் இல்லை!!
புரிந்தவர்கள் செயல்படுத்துங்கள்!!




















அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

வியாழன், 3 செப்டம்பர், 2015

இயற்கையின் அதிசயம்...

தாஜ்மஹாலோ, சீனப்பெருஞ்சுவரோ
அல்ல அதிசயம்...!



இவைதான் அதிசயங்கள்..

கண்களை மூடி சில நிமிடம் இந்த கற்பனை வனத்துக்குள் வாழ்ந்து பாருங்கள்!!

பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் படர்ந்து விரிந்த பசுமையான வனம்..
அழகிய பாதை நெடுகிலும் பல் வண்ண பூச்செடிகளும்,
பவழம் போன்று மின்னும் கூழாங்கற்களும்...
நடைபாதையில் வண்ணக்கம்பளம்
விரித்தது போல் பாதம் தொட காத்திருக்கும் மஞ்சள், சிகப்பு, ஊதா மற்றும் வெண்மை நிற பூக்கள்...



அதில் கால் வைக்கவோ வரவில்லை மனம்...
அதிலிருந்து வரும் மணமோ நெகிழவைக்கிறது மனத்தை..!!

பூக்களில் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சிகள்...
இலைகளில் முத்து
போல் பளிச்சிடும் பனித்துளி..
மரக்கிளையில் பழம் கொறிக்கும் துருதுரு அணில்...
கண்ணெதிரே, நீண்ட பாலருவி...
சில்லென்று முகத்தில் முத்தமிடும் மழைச்சாரல்...
இமைகள் மூடும் கணம்.... திறந்தது மனம்!

வெள்ளி கொலுசு
போல் சலசலவென சத்தமிடும் தூய
நீரோடை, அதில் முகம் பார்க்க வளையும்
வரிக்கவிதைகள்...!!

மனிதர்களின் ஆரவாரம் துளியும் இன்றி
ஆழ்ந்த அமைதியின் நடுவே...
குருவிகளின் கீச்சிடும் சத்தமும்,
படபடவென கூட்டமாக சிறகடித்து
பறக்கும் பறவைகளும்....
எங்கிருந்தோ வரும் புல்லாங்குழலின்
இனிய இசையும்....!!
உலகையே மறக்கசெய்யும் இவை ஒட்டுமொத்த வனத்தையுமே அலங்கரித்திருந்தன.....


இதுமட்டுமா....

கரிய இரவுக்கு ஒளியூட்டும்
பால் வண்ண பவுர்ணமி நிலவு
அதிகாலை அமைதியும், செண்பகத்தின்
இசையும்..பருத்திபோல் அலைபாயும்
கருமேகம்...வானத்தை வண்ணத்தால்
அலங்கரிக்கும் அழகிய வானவில்! .
லேசான இடி, மின்னல்...
மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும்
மயில்!!

அந்த அழகிய தருணம்...
மனதை தொலைத்து....கவலை, சோகம்,
கண்ணீர் மறந்து.......புதிதாய்
பிறந்ததுபோன்ற புத்துணர்ச்சி!!
இமை மூடி திறக்கும்
நிமிடங்களை கூட சேர்த்து வைத்து ரசிக்கனும்..

நமக்கு ஐந்து அறிவு இருந்திருந்தால்...
அம்பானியும் இல்லை!! ஐஸ்வர்யா ராயும் இல்லை!!
ஆறறிவு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு
பூக்களுமே ஐஸ்வர்யா ராய்தான்!!

இயற்கைதான் எல்லாமே.....
இயற்கையை ரசித்தாலே போதும்..
இயற்கையை உணர்ந்தாலே போதும்...

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடிந்த மனிதனால் ஒரு சொட்டு தண்ணீரை கூட உருவாக்க முடியாது என்று உணர்ந்தாலே போதும்!..
மனிதனால் உருவாக்கப்பட்ட பண காகிதத்திற்காக காடுகளை அழிக்கும் நம்மால் சிறு புல்லை கூட உருவாக்க முடியாது என்று உணர்ந்தாலே போதும்..!!
இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தாலே போதும்..!! நம்மால் உருவாக்க முடியாத விஷயங்களை கை எடுத்து வணங்கி அதை பொன் போல் பாதுகாக்க வேண்டியது மனித இனத்தின் கடமை!

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்..
இயற்கைக்கு உயிர்கொடுப்போம்...
இயற்கையை மனதார நேசிப்போம்...
இயற்கையின் படைப்புகளை ரசிப்போம்...


























அன்புடன்
சங்கீதா சீனிவாசன்